வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தானே,-ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தொடர்ந்த அவதுாறு வழக்கில் ஆஜராவதில் இருந்து காங்., முன்னாள் எம்.பி., ராகுலுக்கு நிரந்தர விலக்கு அளித்து, மஹாராஷ்டிரா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
![]() |
மஹாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை குற்றஞ் சாட்டி, 2014ல் ராகுல் பேசியதாகவும், இதனால் இந்த அமைப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, அதன் பிரமுகர் ராஜேஷ் குந்த் என்பவர் தானே நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணையில், தானேவின் பிவாண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2018ல் ஆஜரான ராகுல், தன் மீது எந்த தவறும் இல்லை என்றார்.
![]() |
இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ராகுல் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் வாடிகார், நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து ராகுலுக்கு நிரந்தர விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும், அவரது வழக்கறிஞர் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மேலும், நீதிமன்றம் உத்தரவிடும் போது ராகுல் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement