ஆமதாபாத்-”உலகின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது இந்தியா. நம் பண்டைய அறிவு முறைகளை நாம் பயன்படுத்தி, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்,” என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.
அறிவுத் திறன்
ஆர்.எஸ்.எஸ்.,சின் துணை அமைப்பான, குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்த புனருதன் வித்யாபீடம் சார்பில், இந்திய புராதன அறிவுமுறைகள் தொடர்பான, ௧,௦௫௧ தொகுப்புகள் நேற்று வெளியிடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
உலகின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே இந்தியா. நம் முன்னோர்கள் பின்பற்றிய, கடைப்பிடித்த, தெரிவித்துள்ள அறிவுத் திறன்கள் மிகச் சிறப்பானாவை.
இதை, நாம் முதலில் பயன்படுத்த வேண்டும். பின், உலக நாடுகளுக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும். இதற்காக, நம் முன்னோர்களின் அறிவுசார் திறன் முறைகள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
பாரம்பரிய யோகா
நம்முடைய பாரம்பரிய யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
அதுபோல, நம் நாட்டுக்கும், உலக நாடுகளுக்கும் பயன்படும், நம் முன்னோர் வகுத்துள்ள அறிவு திறன்களை நாம் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.