நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா (Pushpa Kamal Dahal Prachanda), மாவோயிஸ்டுகள் கிளர்ச்சியின்போது 5000 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனக்கெதிரான ரிட் மனுக்களை (writ petition) ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
முன்னதாக 2020-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்று நிகழ்ச்சியொன்றில், “1996 முதல் 2006 வரையிலான மாவோயிஸ்ட் கிளர்ச்சியின்போது 17,000 பேர் கொல்லப்பட்டதாக எங்கள் மீது பொய்யாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 12,000 பேரை நிலப்பிரபுத்துவ மன்னர்கள் கொன்றனர். நீங்கள் வற்புறுத்தும் பட்சத்தில், அதில் 5,000 பேருக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.

ஆனால், 12,000 பேர் எப்படி இறந்தார்கள் என்பதை விவாதிக்காமல், ஒட்டுமொத்தமாக கொலைப் பழியை என் மீது சுமத்துவது நியாயமாகாது” எனக் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, 5,000 பேரைக் கொன்றதற்கு அவரே பொறுப்பேற்றுக்கொண்டதாக கூறியதை அடிப்படையாக வைத்து, விசாரணை செய்து அவரைக் கைதுசெய்ய வேண்டுமென ஆரன் (Aaran), புத்தகோகி (Budhathoki) ஆகிய வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.