பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியிலிருக்கும் ராணுவ முகாமில் கடந்த 12.04.2023 அன்று அதிகாலை 4:30 மணியளவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர்கள் நான்கு பேர் இறந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இரண்டு வீரர்களில் ஒருவர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த ஆர்.கமலேஷ் (24) ஆவார்.
ஆர். கமலேஷ் இறந்த செய்தியை அவரின் குடும்பத்திற்கு ராணுவ தலைமை நேற்று காலை தெரிவித்தது. அவரின் உடல் 13-ம் தேதி மாலை பஞ்சாப் ராணுவ முகாமிலிருந்து புறப்பட்டு இன்று (14.04.2023) காலை சொந்த ஊர் பனங்காட்டுக்கு கொண்டுவரப்படும் என ராணுவ அதிகாரிகளிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கமலேஷின் தந்தை ரவி மற்றும் தாய் செல்வமணி நெசவுத் தொழிலும், அண்ணன் சந்தோஷ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்திலும் பணிபுரிகின்றனர்.