கோவை;

கேரளாவில் பாஜக நிர்வாகி படுகொலையை கண்டித்து கோவையில் பாஜகவினரும் இந்து முன்னணியினரும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எச் ராஜா உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்தும், கேரளாவில் பாஜக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கோவை வடவள்ளி அருகே பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாஜக தேசிய பொதுச் செயலாளர் எச் ராஜா, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எச் ராஜா பேசுகையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெண் உரிமை என்ற பெயரில் சுப வீரபாண்டியன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அது போல் பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் நானே கருப்பு சட்டை போட்டுக் கொண்டு பங்கேற்றிருப்பேன் என பேசுகிறார்.

துணைவேந்தராக இருந்து கொண்டு அவர் இவ்வாறு பேசியது தவறானது. எனவே இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு கருப்புச் சட்டை போட்டுக் கொள்ளட்டும்.

திகவுக்கு செல்லட்டும். ஆனால் பல்கலைக்கழக வளாகத்தில் இது போல் விழாவை அவர் நடத்தியிருக்க கூடாது. இதுகுறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை வைக்கவுள்ளேன் என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எச் ராஜா உள்ளிட்ட 500 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டனர்.
-Vishnupriya R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *