சென்னை:

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 15ம் தேதி இவருக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுமார் 30 மணி நேரம் முதல் கட்ட சோதனையில் ஈடுப்பட்டனர். கடந்த சோதனையில் ₹2.30 கோடி ரொக்கம், 1.13 கிலோ தங்கம், வெள்ளி 40 கிலோ, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கிடைத்தன.

தங்கமணி ரெய்டு

இந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது இரண்டாம் கட்ட சோதனை நடைபெற்று வருகிறது. இன்று சேலத்தில் 1 இடம், நாமக்கல்லில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

தங்கமணி சோதனை

கடந்த சோதனையின் போது தங்கமணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்றன. இதில் பல ஹார்ட் டிஸ்க்குகள், பைல்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. இதன் அடிப்படையிலேயே தற்போது மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மதுவிலக்கு, மின்சாரத்துறை இரண்டிலும் தங்கமணி அமைச்சராக இருந்தார்.

எப்ஐஆர்

இந்த துறைகளில் முறைகேடு நடந்து இருப்பதாக ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ரெய்டின் போது அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு

முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் தரணீதரன் 2வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்ஐஆரில் இவர்களின் பெயர்களிலும் சொத்துக்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. அதேபோல் தங்கமணி கிரிப்டோகரன்சியில் பல கோடிகளை முதலீடு செய்ததாகவும் எப்ஐஆர் தெரிவித்தது. ஆனால் இதை தங்கமணி மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *