டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்கப் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “‘அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த வித ஆதாரமும் கிடையாது. அவரிடம் வீட்டில் சென்று வாக்குமூலம் பெற எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை. வாக்குமூலம் பெற்ற பிறகு அமலாக்கப் பிரிவு இதை செய்திருக்கவேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டைவிட்டு ஓட சாத்தியம் இருக்கிறதா… கடந்த ஒன்றரை ஆண்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சாட்சிகள் யாரையாவது மிரட்டி இருக்கிறாரா… விசாரணைக்கு மறுத்தாரா?. அவரை அவமானப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கைதுசெய்து இருக்கிறார்கள்.
தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்பதற்காக கைதுசெய்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சியை உடைக்க முயற்சிக்கிறார்கள். தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதுதான் ஜனநாயக அமைப்பின் ஓர் அங்கமாகும். அரவிந்த் கெஜ்ரிவாலை கைதுசெய்ய வேண்டிய அவசரம் என்ன? நான் இங்கு அரசியலைப்பற்றி பேசவில்லை. நான் சட்டத்தை பற்றி பேசவில்லை. முதல் கட்டத்தேர்தல் நடக்கும் முன்பாக ஆம் ஆத்மி கட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவசரமாக கைதுசெய்திருக்கிறார்கள்” என்று வாதிட்டார்.
அர்விந்த் கெஜ்ரிவாலை கைது செய்த அமலாக்கப் பிரிவு, அவரை 10 நாள்கள் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தியது. தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான ஊழலில் முக்கிய குற்றவாளி என்று அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. அதோடு அவரை விடுவித்தால் விசாரணை பாதிக்கும் என்றும் அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து கிலோ வரை எடை குறைந்துவிட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.