தமிழ்நாட்டின் சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்றைய தினம் முதல் நடந்து வருகிறது. இன்று கேள்வி பதில் நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக எழுந்து தொகுதி பிரச்னைகளை விவாதித்தனர். அப்போது பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, “சம்சாரம் இல்லாமல்கூட மனிதன் வாழலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. தாயின் கருவறை பரிசோதனை (ஸ்கேன்) முதல் கல்லறை வரை அனைத்திற்கும் மின்சாரப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 3,24,65,000 பேராக இருந்த மின் நுகர்வோர் எண்ணிக்கை, 2023-ம் ஆண்டு 3,31,16,000 பேர் என அதிகரித்திருக்கிறது. தமிழகத்தின் மின் தேவை 17 ஆயிரம் மெகா வாட்ஸ். ஆனால் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி 16,915 மெகா வாட்ஸ். இதில் ஏற்படும் பற்றாக்குறையான மின்சாரத்தை வெளியில் வாங்கிக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நீர் மின் நிலையங்கள் மூலமாகக் குந்தா, காடம்பாறை, மேட்டூர் ஆகிய பெரிய அணைகள், சிற்றணைகள், கதவணைகள் என மொத்தம் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் 47 இருக்கிறது.