லோக் சபா தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகள், `இந்தியா” கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் களமிறங்கவிருக்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி என 28 கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டணியில், தற்போது அடுத்தகட்டமாக சீட் பகிர்வு பேச்சுவார்த்தை சென்றுகொண்டிருக்கிறது. அதோடு, ஒரு வழியாக கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டிருக்கிறார். இடையில், நிதிஷ் குமாருக்கு அதிருப்தி இருப்பதாகப் பேச்சுகள் வந்தாலும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
![`இந்தியா’ கூட்டணி](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-12%2Fc89f2d3a-ed7e-4c48-aeb2-2b372b0de3fc%2F6572c163163ec.jpg?auto=format%2Ccompress)
இதுவொருபக்கமிருக்க, உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க-வை எதிர்த்து வரும் முன்னாள் முதல்வர் மாயாவதியின் கட்சி பகுஜன் சமாஜ், இந்தியா கூட்டணியில் ஆரம்பம் முதலே இடம்பெறவில்லை. `அவர்கள்தான் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. நாங்கள் தனித்தே போட்டியிடுவோம்’ என மாயாவதி வெளிப்படையாகவே கூறினார். இந்த நிலையில், 2024-ல் தனித்து களமிறங்குவோம் என உறுதியாகக் கூறியிருக்கும் மாயாவதி, தேர்தலுக்குப் பிறகு கூட்டணி குறித்து பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.