வேலூர் மாநகராட்சிக் கூட்டம்… இரண்டு மாதங்களுக்குப் பிறகு மேயர் சுஜாதா தலைமையில் இன்று நடைபெற்றது. ஏற்கெனவே, மாமன்றக் கூட்டம் சரிவர நடத்தப்படாத கோபத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மட்டுமல்லாமல், ஆளுங்கட்சி கவுன்சிலர்களுமே கொந்தளிப்புடன்தான் கூட்ட அரங்கிற்கு வந்தனர். தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில், மேயர் சுஜாதா தீர்மானங்களை வாசித்தார். ‘சிறப்புத் திட்டங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘சிறியத் திட்டங்கள்’ என்று படித்தார். உச்சரிப்பு சரியில்லாமல், இப்படியே தவறாக தீர்மானத்தை வாசித்து முடித்தார் மேயர் சுஜாதா. அவரின் பேச்சு, சிரிப்பலையையும் ஏற்படுத்தின.

மேயர் சுஜாதா

இதையடுத்து எழுந்து பேசிய, முதலாவது மண்டலக் குழுத் தலைவரும், தி.மு.க கவுன்சிலருமான புஷ்பலதா வன்னியராஜா, ‘‘என் மண்டலத்துக்குட்பட்ட வார்டுகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. மக்கள் ஒருமாதிரியாகப் பேசுகிறார்கள். இது பற்றி தகவல் தெரிவிக்க அதிகாரிகள் அல்லது கான்ட்ராக்டர்களைத் தொடர்புகொண்டால், அவர்கள் போனையே எடுப்பதில்லை’’ என்றார்.

குறுக்கிட்ட மேயர் சுஜாதா, ‘‘நீங்கள் எப்போது பார்த்தாலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரைப்போல நம்முடைய அரசைக் குறைச்சொல்லிக் கொண்டேதான் இருக்கிறீர்கள். போனக் கூட்டத்திலும் ராஜினாமா செய்வதாகச் சொன்னீர்கள். நம்முடைய முதலமைச்சரும், நம் மாவட்ட அமைச்சரும் எவ்வளவோ செய்கிறார்கள். அதைப்பற்றி பேசாமல், ஆளுங்கட்சியைத் தாக்கிப் பேசுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்’’ என்றார் கோபமாக.

பேச்சைத் தொடர்ந்த தி.மு.க கவுன்சிலர் புஷ்பலதா வன்னியராஜா, ‘‘நான் அரசாங்கத்தைக் குறைசொல்லவில்லை. வார்டு பிரச்னைகளைத்தான் இங்குப் பேசுகிறேன். லைட் எரிகிறதா, இல்லையா என்று துணை மேயரிடம் கேட்டுப் பாருங்கள். அவரும் என் மண்டலத்தைச் சேர்ந்தவர்தானே’’ என்று பதிலடிக் கொடுத்தார். இதனால், மேயருக்கும், தி.மு.க கவுன்சிலர் புஷ்பலதா வன்னியராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருக்கட்டத்தில் மாமன்றத்தை விட்டு வெளியேற முயன்ற புஷ்பலதா வன்னியராஜாவைத் துணை மேயர் சுனில்குமார் சமாதானப்படுத்தி, உட்காரச் சொன்னார்.

பரபரப்புக்குள்ளான மாமன்றக் கூட்டம்

அதைத் தொடர்ந்துப் பேசிய அ.தி.மு.க கவுன்சிலர் ரமேஷ் என்பவர், ‘‘நீங்கள் மேயர்தானே. உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா… நீங்கள் எதுச் சொன்னாலும் அதிகாரிகளும், கான்ட்ராக்டர்களும் கேட்பதே இல்லை. மேயர் உத்தரவை அதிகாரிகள் மதிப்பதே கிடையாது. நான்கு மண்டலங்களிலும் கடந்த ஓராண்டாக ஒரு மீட்டிங்கூட நடத்தப்படவில்லை. மேற்கொண்டு, அடுத்த வேலைகளும் நடைபெறவில்லை. மண்டலத்துக்காவது பவர் இருக்கிறதா, இல்லையா?’’ என்று கேள்வியெழுப்பினார். உடனே, மேயரின் ஆதரவு கவுன்சிலர்கள் ஒருசிலர் கோபப்பட்டு எழுந்து, அ.தி.மு.க கவுன்சிலரைச் சூழ்ந்துகொண்டு… ‘‘மைக்கை கொடுயா. யோவ் உட்காருயா’’ என்று வாக்குவாதம் செய்ய, மாமன்றக் கூட்டமே சத்தமும், சலசலப்புமாக மாறியது. அரைமணி நேரத்துக்குள்ளாக கூட்டத்தையும் முடித்துக்கொண்டு வெளியேறினார் மேயர் சுஜாதா. மாநகராட்சிப் பணிகள் குறித்தும், பிரச்னைகள் பற்றியும் கடைசி வரை கலந்தாலோசிக்கப்படவே இல்லை.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *