மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை 10 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து ரசிப்பதற்காக பிரம்மாண்ட கேலரி, தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு சார்பில், மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.15-ம் தேதி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி, மதுரை நகர் பகுதியில் நடப்பதால் ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வாடிவாசல், கேலரிகள் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2024/01/12/17050585162006.jpg)
வாங்கப்பட்டுள்ள சணல் கயிறுகள்
இந்த போட்டியை கடந்த காலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அமைச்சர் உதயநிதி மற்றும் பல தலைவர்கள் நேரடியாக வந்து கண்டு ரசித்தனர். அதுபோல், இந்த ஆண்டும் முக்கிய தலைவர்கள் வருவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முக்கிய தலைவர்கள் போட்டியை காண வரலாம் என்பதால், ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.
அலங்காநல்லூரை போல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்கவும் வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்காக சிறப்பு கேலரி இங்கு அமைக்கப்படாவிட்டாலும், அவர்கள் உள்ளூர் மக்களுடன் அமர்ந்து போட்டியை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.