உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக “பிரான் பிரதிஷ்டா” என்ற பெயரில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த விழா 16-ம் தேதி தொடங்கி ஏழு நாள்களுக்கு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வரும் 16-ம் தேதி, கோயில் அறக்கட்டளை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அமைப்பினர், பரிகார நிகழ்ச்சியை நடத்துவர். அதைத் தொடர்ந்து, சரயு நதிக்கரையில் ‘தஷ்வித்’ குளியல், விஷ்ணு வழிபாடு, பசுக்களுக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறும்.
20-ம் தேதி ராமர் கோயிலின் கருவறை சரயு நீரால் கழுவப்பட்டு, அதன் பிறகு வாஸ்து சாந்தி மற்றும் ‘அன்னாதிவாஸ்’ சடங்குகள் நடைபெற்று, ஜனவரி 21-ம் தேதி, ராம் லல்லா (குழந்தை ராமர்) சிலை 125 கலசங்களில் உள்ள புனிதநீர் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு, 22-ம் தேதி காலை மஹா பூஜைக்குப் பிறகு அபிஜீத் முகூர்த்தத்தில், குறிப்பாக மதியம் 12:20 முதல் 12:30 மணிக்குள் சிலை நிறுவப்படும். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல வி.வி.ஐ.பி விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி, ராம் லல்லா சிலைக்கு தொடக்க ஆரத்தி செய்வார் எனக் கூறப்படுகிறது. இந்த விழாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்காக, நகரின் தர்ம பாதை, ராம் பாதையில் மின்சார பேருந்துகளை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேலும், ஜனவரி 15 முதல் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதேடு, அயோத்தியை சூரிய நகரமாக மாற்றும் முயற்சியில், குப்தர் காட், நிர்மலி குண்ட் இடையே 10.2 கிமீ பரப்பளவில், சூரிய சக்தியில் இயங்கும் 470 சோலார் தெரு விளக்குகள் நிறுவப்பட்டிருக்கிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-06/4d6fff2d-834d-4464-a09c-f3246fafb90c/62ac2d3f832a2.jpg)
இந்த விழாவில், ராமர் கோயில் அறக்கட்டளையின் சிறப்பு அழைப்பாளர்களாக, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, தமிழ்நாட்டில் ரஜினி, ஓ.பி.எஸ், 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், முக்கிய விஞ்ஞானிகள், பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருது பெற்றவர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் என மொத்தம் 7,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்படும் 22-ம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்வை “தேசிய விழா” எனக் குறிப்பிட்டு, அன்று மது விற்பனைக்கும் தடை விதித்திருக்கிறது உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு.