அவர் மனைவி விசாலாட்சி, “நான் நிரபராதி. எனக்கு 68 வயதாகிறது. மூட்டு வலியினால் பாதிக்கப்பட்டுள்ளேன். கீழமை நீதிமன்றம் போதிய சாட்சிகள் இல்லாததால் என்னை நிரபராதி என விடுதலை செய்தது. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுகிறேன்” என்றார்.
அதைத் தொடர்ந்து தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதிபதி, மருத்துவ காரணங்களைக் கணக்கில் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படுவதாகக் கூறினார். பின்னர் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். “ஜனவரி 22-ம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ இருவரும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் கீழமை நீதிமன்றம் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்” என உத்தரவிட்டார். நேரடியாக தீர்ப்பை 30 நாள்கள் நிறுத்தி வைப்பதாகக் கூறாவிட்டாலும், மறைமுகமாக இதற்கு அதுதான் அர்த்தம் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.
இதற்கிடையில், பொன்முடி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஏற்கெனவே இந்த வழக்கில் சொத்துகள் முடக்கம் தொடர்பாக 2011-ம் ஆண்டு சட்டத்துறை செயலாளராக இருந்த தாங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தான் உத்தரவு பிறப்பித்தீர்கள்” எனச் சுட்டிக்காட்டினார். அதற்கு, “வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்பு நடந்த நிகழ்வு அது” என்று நீதிபதி பதிலளித்தார்.
தொடர்ந்து பொன்முடியும், அவரின் மனைவி விசாலாட்சியும், இருவரின் வயது மற்றும் மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, குறைந்த தண்டனை விதிக்க வேண்டும் என்று கைக்கூப்பி கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு நீதிபதி மேலே கைக்காட்டி, “தங்களுக்கு மேல் உள்ள நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கோரலாம்” எனத் தெரிவித்தார்.