ஹைதராபாத்-ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் முன் நின்று அக்கட்சித் தலைவர்கள் ‘செல்பி’ எடுத்து வெளியிடுவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இங்கு, சமீபத்தில் பிரகாசம் மாவட்டத்தின் மர்க்காபுரம் என்ற இடத்தில், நான்கு லட்சம் ஏழை பெண்களுக்கு, 658 கோடி ரூபாய் உதவித் தொகையின் இரண்டாம் தவணை அளிக்கும் நிகழ்வில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்றார்.
அப்போது, ‘கடந்த 2014 – 19 காலகட்டத்தில், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது, மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை’ என, குற்றஞ்சாட்டினார்.
இதை தொடர்ந்து, தெலுங்கு தேசம் ஆட்சியின் போது ஏழை எளிய மக்களுக்கு கட்டித் தரப்பட்ட வீடுகள் முன் நின்று, சந்திரபாடு நாயுடு செல்பி எடுத்து, அதை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த பதிவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை அவர் இணைத்து உள்ளார்.
இந்நிலையில், மாநிலம் முழுதும் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள சந்திரபாபுவின் மகன் லோகேஷ் நாயுடு, அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள, ‘கியா மோட்டார்’ நிறுவன தொழிற்சாலை முன் நின்று செல்பி எடுத்து, அதை வெளியிட்டார்.
‘தெலுங்கு தேசம் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து, மேலும் பல செல்பிகளை தொடர்ந்து வெளியிடுவோம்’ என, அக்கட்சித் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.