சென்னை:

கடந்த ஒரு மாதமாக அரசியல் வட்டாரத்தில் பேச்சாக இருக்கும் விஷயம் என்றால் அது எம்எல்ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது பற்றியதுதான். வரிசையாக அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி காங்கிரஸ் நிர்வாகிகள் வரை பலர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் .. இதற்காக குரலும் கொடுத்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து இதுவரை எந்த விதமான கிரீன் சிக்னலும் இதற்கு கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் மேலிடத்தில் என்னதான் நடக்கிறது. உதயநிதி அமைச்சர் ஆக வாய்ப்பு இருக்கிறதா என்று நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து பார்த்தோம். உதயநிதிக்கு தலைமையின் ஆதரவு இருக்கிறதா, உண்மையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுமா என்று அறிவாலய வட்டாரத்தில் விசாரித்து பார்த்தோம்.

 

உதயநிதி அமைச்சர்

நம்மிடம் பேசிய மூத்த நிர்வாகி ஒருவர் சொன்னதில், உதயநிதியை கேபினெட்டில் இணைத்துக் கொள்ள வேண்டும் ; அவரை துணை முதல்வராக்க வேண்டும் என்றெல்லாம் திமுகவிலிருந்து குரல்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. சில நாட்களாக இது அதிகரித்துள்ளது. திமுகவை தவிர்த்து மற்றவர்கள் இதே குரலை எழுப்புவதை பொறுட்படுத்த தேவையில்லை. ஏனெனில், அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.. அது விஷயம் இல்லை.

 

அன்பில் மகேஷ் உதயநிதி

ஆனால் அன்பில் மகேஷ் உள்பட அமைச்சர்கள் பலரும், உதயநிதிக்காக தீவிரமாக பேசுகிறார்கள். இது தலைமை காதுக்கும் சென்று இருக்கிறது. முதல்வர் குடும்பத்திலேயே சிலர் உதயநிதியை அமைச்சராக வேண்டும் என்று தலைமையிடம் பேசி இருக்கிறார்கள் என்று அந்த நிர்வாகி நம்மிடம் கூறினார். அதாவது உதயநிதியை அமைச்சராக்கி, முதல்வர் ஸ்டாலினின் சுமைகளை குறைக்க வேண்டும் என குடும்பத்தில் சிலர் நினைப்பதாக அவர் நம்மிடம் தகவல் பகிர்ந்து கொண்டார்.

 

குடும்ப முக்கியஸ்தர்

அதிலும் குடும்பத்தில் முக்கியமான நபர் ஒருவரும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். மேலும் சிலரிடம் விசாரித்ததில், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் குடும்பத்தினர் சிலரும், அமைச்சர்கள் சிலரும் பேசிய போது, எப்போ செய்யணும்னு எனக்குத் தெரியும் ; இப்போ செய்தா விமர்சனங்கள் வரும் என்று முதல்வர் சொல்லியதாக கூறப்படுகிறது.

 

முதல்வர் கருத்து

அதற்கு காரணம், அமைச்சராவைக்குள் உதயநிதியை கொண்டு வந்து விட்டால், அது தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கலாம் என்பதால்தான் உதயநிதியை உடனடியாக அமைச்சரவைக்குள் கொண்டு வர ஸ்டாலின் தயங்குகிறார் என்கின்றனர். அவர் நன்றாக செயல்படுகிறார். சிறப்பான எம்எல்ஏவாக இருக்கிறார். மக்களிடம் அவருக்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. ஆனால் இப்போது அமைச்சராக்கினால் இதை எதிர்க்கட்சிகள் தேவையின்றி பெரிதாக்கும். பின்னர் பார்க்கலாம்.

 

உதயநிதி துணை முதல்வர்

இப்போது வேண்டாம் நகர்ப்புற உள்ளாச்சி தேர்தல்களுக்கு பிறகு கேபினெட்டில் மாற்றம் செய்யலாம் என்று முதல்வர் நிர்வாகிங்களிடம் கூறியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் இவரை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகளுக்கு இடையே இன்னொரு பக்கம் உதயநிதியை துணை முதல்வராக வேண்டும் என்று கட்சிக்குள் சிலர் கோரிக்கை விடுத்து வருகிறார்களாம்.

 

சீனியர் அமைச்சர்கள்

இது முதல்வரின் வேலைப்பளுவை குறைக்கும் என்பதால் சிலர் இந்த அறிவுரைகளை வழங்கி வருகிறார்களாம். அதன்படி சீனியர் அமைச்சர்கள் சிலரின் துறைகளைத் தவிர்த்து மற்ற அனைவரின் துறைகளையும் அதிகாரப்பூர்வமாக கண்காணிக்கும் பொறுப்பை அவரிடம் கொடுக்க வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் ஸ்டாலினுக்கு கொடுக்கப்படுகிறதாம். இதற்கும் முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை.

 

துணை முதல்வர் பதவியா?

இந்த வலியுறுத்தல்களை அறியும் சீனியர்கள் மத்தியில் இந்த விவகாரம் அவ்வளவு ரசிக்கப்படவில்லை. குறிப்பாக, ‘உதயநிதியை அமைச்சராக்குங்கள். இதில் யாருக்கும் வருத்தமோ அதிருப்தியோ வரப்போவதில்லை. ஆனால், துணை முதல்வராக்க வேண்டுமா என்பதை தலைவர் ஆழமாக யோசிக்க வேண்டும்’ என சீனியர் அமைச்சர்கள் சிலர் தங்களுக்குள் விவாதித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று அறிவாலய வட்டாரம் நம்மிடம் தெரிவித்துள்ளது.

-Shyamsundar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *