சேலம்;
பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால்
பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவை கொண்டாட உதவும் வகையில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகை அளிக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை எதிர்த்தும், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி. மு. க. அரசை கண்டித்து இன்று அ. தி. மு. க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
சேலம் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் அ. தி.மு.க. சார்பில் தி. மு. க. அரசை கண்டித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டடம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ. தி. மு. க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற
எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்று நிறைவேற்று தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று, போடாதே
போடாதே அ. தி. மு. க. பிரமுகர்கள் மீது பொய் வழக்கு போடாதே, மக்கள் பிரச்சினையில்
கவனம் செலுத்து என பல்வேறு கோஷங்கள் தி.மு.க. அரசுக்கு எதிராக எழுப்பினார்கள்.
இதில் அ. தி. மு. க. எம். பி. க்கள், எம். எல். ஏ. க்கள், முன்னாள் எம். பி., எம். எல். ஏ. க்கள், மாவட்டநிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலர்கள்,பகுதி, ஒன்றிய, நகர செயலர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள்
கவுன்சிலர்கள், வட்ட, கிளை செயலாளர்கள், இளைஞர்- இளம்பெண் பாசறை நிர்வாகிகள்,
உறுப்பினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தையொட்டி சேலம் மாநகர போலீசார் 1000-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டு
இருந்தனர். அவர்கள் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.