Loading

புதுவை:

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள முதலியார் பேட்டை தொகுதியில் தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக சம்பத் உள்ளார். எம்.எல்.ஏ. சம்பத் தொகுதிக்கு வழக்கமான பணிகளை செய்து வருகிறார். புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் எம்.எல்.ஏ.வாக சம்பத்துக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது அறையில் மேசை, நாற்காலி உள்ளிட்ட எதுவும் அமைத்து தரப் படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

தி.மு.க எம்.எல்.ஏ சம்பத்

இதனால் எம்.எல்.ஏ சம்பத் அங்குள்ள அறையில் தரையில் அமர்ந்துதான் தனது பணிகளை செய்து வருகிறார். தொகுதி மக்களையும் தரையில் அமர்ந்தபடிதான் சந்தித்து வருகிறார். இது தொடர்பான தகவல் புகைப்படத்துடன் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுவையில் திமுக எதிர்க்கட்சியாக உள்ளது.

அவமானப்படுத்தும் நோக்கம்

இதனால் தி.மு.க.வை அவமதிக்கும் விதமாகவே இதுபோன்று புதுவை ஆளும் அரசு செய்துள்ளது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சட்டையே தி.மு.க எம்.எல்.ஏ சம்பத்தும் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சட்டமன்ற ஒதுக்கப்பட்ட அலுவலக அறையில் மேசை, நாற்காலிகள் கூட அமைத்து தரவில்லை.

மக்களின் நலனுக்காக…

நூறு சதுர அடி கொண்ட அலுவலகம்தான் ஒதுக்கப்பட்டது. நான் ஏழ்மை, எளிமை நிலையில் இருந்துதான் இந்த இடத்துக்கு வந்தேன். அதனால் நாற்காலி இல்லையென்றாலும் தரையில் அமர்ந்து என்னால் மக்கள் பணி செய்ய முடியும். சட்டப்பேரவை வளாகத்தில் 40 ஆயிரம் பொதுமக்களை சந்திக்க வேண்டி யுள்ளது. மக்களின் நலனுக்காக ஆளும் அரசை அதிகம் கேள்வி கேட்டுள்ளேன்.

இதுதான் காரணம்

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களை ரூ.5 லட்சம் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தில் சேர்க்கவும், ரூ.5 ஆயிரம் மழை நிவாரணம் அனைவருக்கும் வழங்க அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் போராட அழைப்பு விடுத்துள்ளேன். மேலும், சாலை அமைக்காத அரசை கண்டித்து சொந்த செலவில்சாலை அமைத்தது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பணிகளை செய்துள்ளேன்.

 

திட்டமிட்டு செய்துள்ளனர்

இதனால்தான் என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு திட்டமிட்டு இந்த அவல நிலையை எனக்கு செய்துள்ளனர். ஆனால் மாநில அரசு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு விசாலமான அறை, சொகுசு நாற்காலிகள், சொகுசு கார்கள் வழங்க மட்டும் நிதி ஒதுக்குகிறது என்று எம்.எல்.ஏ சம்பத் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புதுவை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *