சென்னை:
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருவதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் பூண்டி ஏரியில் இருந்து ஏற்கனவே 5000 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 10,241 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்லும் 500 மீட்டர் அருகே உள்ள தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூரிலிருந்து பூண்டி வழியாக ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், நயப்பாக்கம், நம்பாக்கம், அரியத்தூர், பங்காருப்பேட்டை, சென்றான்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலத்தின் வழியாக இளைஞர்கள் சென்று புகைப்படம் எடுப்பது, வேடிக்கை பார்ப்பது என இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாலத்தின் அருகே கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.…