ஆமிர் கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள திரைப்படம் ‘லாபத்தா லேடீஸ்’.

பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். காமெடி டிராமா ஜானரில் உருவான இத்திரைப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி-யில் வெளியானது. இப்படத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவை, கிரண் ராவ் மறைமுகமாகத் தாக்கியிருப்பதாக நெட்டிசன்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

லாபத்தா லேடீஸ் | Laapataa Ladies

அதாவது ‘லாபத்தா லேடீஸ்’ படத்தில் “உன்னை நேசிக்கும் ஒருவனுக்கு உன்னை அடிக்க உரிமை உண்டு என்பார்கள். அந்த உரிமையை ஒருநாள் நான் கையில் எடுத்துக்கொண்டேன்” என்று மஞ்சு மாயி என்ற பெண் கதாபாத்திரம் பேசும் வசனம் ஒன்று இடம்பெற்றிருக்கும். அதாவது ஒரு பெண்ணை நேசிக்கும் ஆணுக்கு அவளை அடிக்க உரிமை இருக்கிறது என்றால், அந்த ஆணை நேசிக்கும் பெண்ணுக்கும் அதே உரிமை இருக்கிறது என்பதுதான் அந்த வசனத்தின் உள்அர்த்தம்.

இந்த வசனம் ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறது. காரணம் அவர் இயக்கிய ‘கபீர் சிங்’ திரைப்படத்தில் ஹீரோயினை, ஹீரோ அறைவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்தப் படம் வெளியான சமயத்தில் குறிப்பிட்ட அந்தக் காட்சி சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அப்போது பேட்டி அளித்திருந்த சந்தீப் ரெட்டி வங்கா, “காதலிக்கும் ஒரு பெண்ணைத் தொடவோ, அறையவோ, முத்தமிடவோ, கசப்பான வார்த்தைகளைப் பேசவோ நமக்குச் சுதந்திரம் கிடையாது என்றால், அந்த இடத்தில் காதலும் உணர்ச்சிகளும் இல்லை என்றுதான் அர்த்தம்” என்று கூறியிருந்தார்.

சந்தீப் ரெட்டி வங்கா- கிரண் ராவ்

அதனால் ஒரு பெண்ணுக்கும் அதே உரிமை இருக்கிறது என்பதை சந்தீப் ரெட்டி வங்காவிற்கு உணர்த்துவதற்காகத்தான் ‘லாபத்தா லேடீஸ்’ படத்தில் இப்படியான வசனத்தை கிரண் ராவ் வைத்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *