திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (30). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி திவ்யா (24). கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, வடிவேல் காணாமல் போனதாக அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, வடிவேலுவைத் தேடிவந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூரை சேர்ந்த பாலாஜி (48) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, வடிவேல் குடிபோதையில் திவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால், திவ்யா,அவரது தாய் மரியாள் (48) மற்றும் தந்தை தேவராஜ் (50) ஆகியோருடன் சேர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஷம் கொடுத்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்து, உடலை திருப்பூர் – தாராபுரம் சாலையில் கிணற்றில் போட்டுவிட்டதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீஸார், திவ்யா, மரியாள், தேவராஜ், பாலாஜி ஆகியோரைக் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், திவ்யாவின் அக்காள் கணவர் பொங்கலூரை அடுத்த காட்டூர்புதூரை சேர்ந்த தெய்வேந்திரன் (37), கரூர் குளித்தலை முத்து (32), மதுரை உசிலம்பட்டி பவுன்ராஜ் (53) ஆகியோருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கணவர் மாயமானது தொடர்பாக 9 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்த திவ்யா, தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். குறிப்பாக, காதல் பாடல்களுடன் வீடியோக்களை பதிவு செய்துள்ளார்.
கணவரைக் கொலை செய்த பின்னரும், இளம்பெண் ஜாலியாக இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்து வந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.