சமீபத்தில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜமுருகன் கோயிலில் 56 அடி ராஜ முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகனின் சிலை ஒழுங்காக அமையவில்லை என்று பரபரப்பாகப் பேசப்பட்டு, அது உடனே சீர் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.
![தெய்வச் சிலை](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F03533604-63ac-426e-ab85-98fa6352abf8%2Fsilai3.jpg?auto=format%2Ccompress)
இந்தச் சிலை மட்டுமல்ல, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் எங்கும் சிவன், சக்தி, காளி, விநாயகர், முருகன், பெருமாள் போன்ற பல சிலைகள் ஒழுங்கின்றி கேலி சிற்பம் போல அமைந்திருப்பதைக் கண்டிருக்கிறோம்.
கட்டடங்கள் உருவாகப் பல விதிமுறைகளும் வழிகாட்டல்களும் இருக்கும்போது தெய்வமாக வணங்கப்படும் இது போன்ற சிலைகள் அமைக்க கட்டுப்பாடுகள், வழிகாட்டும் அமைப்புகள் என ஏதேனும் உள்ளதா என்று மாமல்லபுரம் அரசு சிற்ப மற்றும் கட்டடக்கலைக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர், எஸ். கீர்த்திவர்மன் பெருந்தச்சனிடம் கேட்டோம்.
“காஞ்சி கயிலாசநாதர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில் என சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முன்பே அற்புதமான ஆலயங்களையும் சிற்பங்களையும் அமைத்து உலகை வியக்கச் செய்தவர்கள் தமிழர்கள். தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம் உலகப் புகழ் கொண்டது என எல்லோரும் வியக்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று முறையான வழிகாட்டல் இல்லாமல் பல சிமெண்ட் சிலைகள் கேலிக்குரியதாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து, தமிழக அரசிடமும் அறநிலையத்துறை கவனத்துக்கும் பல முறை எடுத்துக் கூறியும் ஏனோ இதில் யாருமே செவி மடுக்கவில்லை. ஒரு வீடு கட்ட, வரைபடம், பல வழிகாட்டுதல்கள், முறையான அனுமதி என்று எல்லாம் இருக்கும்போது தெய்வமாக வணங்கப்படும் சிலைகளைக் கோயில்களில் நிர்மாணிப்பதில் இந்த அலட்சியம் ஏன் என்று தெரியவில்லை.
![தெய்வச் சிலை](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2Fa85e3764-d2c9-4b2c-9028-d8d479ec220c%2Fsilai2.jpg?auto=format%2Ccompress)
சிற்ப சாஸ்திரமோ, தொழில் முறையோ அறியாத கட்டடத் தொழிலாளர்களே தெய்வச் சிலைகள் மற்றும் சிற்ப வேலைகளைச் செய்வது தவறு. இது முழுக்க வியாபார நோக்கத்துக்காக மட்டுமே செய்யப்படுகிறது. உயரமான சிமெண்ட் சிலைகள் எல்லாம் பக்திக்காக அல்ல, மக்களைக் கவர்ந்து இழுக்கவே என்றும் தெரிந்து கொள்ளலாம். கருங்கல், சுதை அல்லது உலோகங்களில் மட்டுமே சிலைகள் செய்வது நம் வழக்கம். இப்போது கட்டடங்கள் போல இரும்பு கம்பி, சிமெண்ட் கொண்டு சிலைகள் செய்வது தவறானது.