சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை யில் பிரசித்தி பெற்ற கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் உற்சவ வழக்கத்தையே இந்த கோயிலிலும் பின்பற்றி வருகின்றனர். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், காஞ்சிபுரத்தில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல், திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலிலும் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரம்மோற்சவத் தின் முக்கிய நிகழ்வான கருட சேவை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி, மேளதாளம் முழங்க பல்லக்கில் வீதி உலா வந்தார்.
10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்லக்கை சுமந்து சென்றனர். கோயிலின் உள்ளே பல்லக்கில் சுவாமி வலம் வந்தபோது, திடீரென பல்லக்கின் தண்டு முறிந்தது. இதனால், பல்லக்கை தூக்கிச் சென்ற பக்தர்கள் நிலைதடுமாறினர். இதில் பல்லக்கு சரிந்து சுவாமி சிலை விழுந்தது.
பக்தர்கள் அதிர்ச்சி: இதைக்கண்டு அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுவாமி சிலை சேதமின்றி மீட்கப்பட்டு கோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து கோயில் வாசல் மூடப்பட்டு, அருகில் உள்ளகோயிலில் இருந்து பல்லக்கு தண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுவாமிக்கு பூஜைகள் செய்யப் பட்டன.
இதைத்தொடர்ந்து கோயில் வாசல் திறக்கப்பட்டு கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி சிலை கீழே விழுந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.