சென்ற படைப்பில் பாலைவன வெக்கையில் தகிக்க வைத்த பிரித்விராஜ், இதில் அப்படியே நேரெதிராக நின்று சிரிக்க வைத்திருக்கிறார். மச்சானைக் காண்பதற்கு முன், பின் இருக்கும் மாற்றங்களை வைத்து அவர் செய்யும் லூட்டிகள் அட்டகாசம். அப்பாவியான முகபாவம், வெடித்துச் சிரிக்க வைக்கும் ஒன்லைனர், மச்சான் பாசம், இரண்டாம் பாதியில் செய்யும் ரகளைகள் எனப் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் பேஸில் ஜோசப். இந்த இரண்டு மைய பாத்திரங்களை வைத்தே காட்சிகள் நகர்வதால் கதாநாயகிகள் நிகிலா விமல், அனஸ்வர ராஜன் ஆகியோருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. என்றாலும் அவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர். இறுதியில் வரும் யோகி பாபுவின் காமெடி பெரிதாக ‘கிளிக்’ ஆகவில்லை.
![Guruvayoorambala Nadayil Review](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F82dcf381-91a2-4862-b9be-c99bcb67791d%2FWhatsApp%20Image%202024-05-20%20at%202.03.10%20PM.jpeg?auto=format%2Ccompress)
‘கே ஃபார் கல்யாணம்’, ‘கே ஃபார் கிருஷ்ணா’ ஆகிய இரு பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. அதிலும் க்ளைமாக்ஸ் நெருக்கத்தில் வரும் ‘கிருஷ்ணா’ பாடலின் ரீமிக்ஸ் அட்டகாசம். பின்னணி இசையில் முற்பாதியில் பழைய ‘அழகிய லைலா’ பாட்டை வைத்து அதிக நேரத்தை ஒப்பேற்றிய உணர்வைத் தந்தாலும், இரண்டாம் பாதியில் துள்ளலான இசையைத் தந்திருக்கிறார் அங்கித் மனோன். கொடுக்கப்பட்ட சிறிய இடத்துக்குள் பல்வேறு கேமரா கோணங்களைப் பயன்படுத்தி ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரஜ் ரெவி. அதிலும் க்ளைமாக்ஸ் கல்யாண கலாட்டா, கால்பந்தாட்ட டர்ஃப்க்குள் நடக்கும் காட்சி ஆகியவை ஜான் குட்டியின் படத்தொகுப்போடு இணைந்து சிறப்பான திரை அனுபவமாக மாறியிருக்கிறது.