சின்னத்திரை சீரியல் இயக்குநர்களுக்கென இயங்கி வரும் சங்கம் சென்னை விருகம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. சுமார் 1000 பேர் வரை உறுப்பினர்களாக இருக்கும் சங்கத்தில் இயக்குநர் தளபதி தற்போது தலைவராக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், முறைப்படி தேர்தலை நடத்தாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக அவர் மீது உறுப்பினர்கள் சிலர் சமீபமாகத் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர். இது குறித்து விகடனில் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
அப்போது சின்னத்திரை இயக்குநர் சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதாகவும், அதற்காகச் சங்கம் ஒரு விழா எடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும், அந்த விழாவில் தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி.க்கள் சிலர் கலந்து கொள்வதற்குத் தேதி கிடைப்பதில் காலதாமதம் ஆவதாலேயே தேர்தலும் தள்ளிப் போவதாகவும் விளக்கம் தந்திருந்தார் தளபதி.
![மங்கை அரிராஜன்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F44e32fa4-7f20-4b47-baab-68ebdf9e62f0%2Fmangai.jpg?auto=format%2Ccompress)
உறுப்பினர்கள் காலையிலிருந்தே ஆர்வமுடன் வந்து ஓட்டுப் போட்டனர். இந்தத் தேர்தலில் ‘உழைப்பவர்கள் அணி’ என்கிற பெயரில் தளபதி மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட, அவரை எதிர்த்து இயக்குநர் மங்கை அரிராஜன் போட்டியிட்டார். தளபதி அணி சார்பாக நடிகை குட்டி பத்மினி, இயக்குநர் அரவிந்த்ராஜ் உள்ளிட்டோர் போட்டியிட, மங்கை அரிராஜன் அணியிலிருந்தும் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு நேற்று மாலை முடிந்ததும், அடுத்த சில மணி நேரங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டன.
தலைவர் பதவிக்கான ஓட்டுகள் முதலில் எண்ணப்பட, ஆரம்பத்திலிருந்தே அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையிலிருந்தார் மங்கை அரிராஜன். வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த போது முந்நூற்றுக்கும் அதிகமான வாக்குகள் பெற்றிருந்த மங்கை அரிராஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.