மேட்டூர்: மேட்டூர் அடுத்த தொப்பூர் பகுதியில் தருமபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
தருமபுரி மக்களைவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளராக சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இன்று தருமபுரியில் இருந்து மேச்சேரிக்கு காரில் வந்தார். மாவட்ட எல்லையான தொப்பூர் பிரிவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, வாகன சோதனயில் ஈடுபட்டு வந்த கண்காணிப்பு குழு அதிகாரி ராஜசேகர் தலைமையிலான குழுவினர் வாக்கு சேகரிக்க வந்த சவுமியா அன்புமணியின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று மேச்சேரி பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். சவுமியா அன்புமணி வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.