சென்னை: முன்னாள் காதலியை மிரட்டி ரூ.5 லட்சம் மற்றும் நகைகளைப் பறித்ததோடு, திருமணத்தையும் தடுத்து நிறுத்தியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடந்தையாக இருந்ததாக அதிமுக பிரமுகரும் கைதாகியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 18 வயது இளம் பெண் ஒருவர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், “தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது யூனஸ் (18) என்பவரை ஒரு வருடமாக காதலித்தேன். அவர் மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதை அறிந்து 4 மாதங்களுக்கு முன் அவரிடமிருந்து விலகிவிட்டேன்.
இந்நிலையில், காதலித்த நேரத்தில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காண்பித்து என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். அதையும் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்துக் கொண்டார். ரூ.5 லட்சம் வரை பணமும், தங்க நகையையும் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், எனக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து, முகமது யூனஸ் தனது நண்பர்களான கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவரும் அதிமுக 53-வது வட்ட இளைஞர் அணி செயலாளருமான பப்லு என்ற ராமச்சந்திரன் மற்றும் 17 வயது இளைஞர் ஒருவரை அழைத்து வந்து திருமணத்தை நிறுத்தச் சொல்லி என்னை மிரட்டித்தாக்கினார்.
பின்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டவருக்கு, நெருக்கமாக இருக்கும் பழையபுகைப்படம், வீடியோவை அனுப்பி, திருமணத்தை நிறுத்தினார். எனவே, முகமது யூனஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார் அந்தப் பெண்ணின் புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.