காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் அருகே இளைஞர் படுகொலை வழக்கில் ஆம்பூர் நீதிமன்றத்தில் நேற்றிரவு 5 பேர் சரணடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன் ( 35 ). திருமணமான இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். மக்கள் தேசம் கட்சியின் மாவட்டச் செயலாளராக விவேகானந்தன் பொறுப்பு வகித்து வந்தார். இத்துடன், பழைய கார்களை வாங்கி விற்பனையும் செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டிலிருந்து காவேரிப்பாக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் விவேகானந்தன் சென்ற போது, காரில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் விவேகானந்தன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை இடித்து அவரை கீழே தள்ளினர். இதில், கீழே விழுந்த விவேகானந்தனை காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் காவேரிப்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விவேகானந்தன் உடலை மீட்டு பிரேதப் பரி சோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, விவேகானந்தனை கொலை செய்த நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விவேகானந்தனின் உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காவேரிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த, ராணிப்பேட்டை ஏஎஸ்பி யாதவ் கிரிஷ் அசோக் தலைமையிலான காவலர்கள் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், விவேகானந்தன் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்காக தனிப்படை அமைக்கப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், விவேகானந் தன் கொலை வழக்கில் தொடர்பு டையதாக கூறி, ராணிப்பேட்டை மாவட்டம் எசையனூரைச் சேர்ந்த கோபி ( 28 ), அத்திப்பட்டு காலனியைச் சேர்ந்த ராஜேஷ் ( 34 ), பனப்பாக்கத்தைச் சேர்ந்த தாமோதரன் ( 26 ), பெரிய கிராமத்தைச் சேர்ந்த சந்துரு ( 20 ), மாமண்டூரைச் சேர்ந்த சூர்யா ( 28 ) ஆகிய 5 பேர் ஆம்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்றிரவு சரணடைந்தனர்.