சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 8 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அதே பள்ளியில் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகள் சிலரை பள்ளி நேரத்தில் அடிக்கடி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். சாக்லேட் மற்றும் மேலும் சில பொருட்களை கொடுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவிகள் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் காலியாக இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு தயாராக இருந்த சில ஆண்கள் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவன் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியை விசாரித்தபோது, “மாணவிகளை ஏமாற்றி வெளியே அழைத்துச் சென்றதால் போலீஸார் மாணவனைக் கைது செய்திருக்கலாம்” என மாணவிகள் தெரிவித்தனராம். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சார்பில், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. கடந்த 23-ம் தேதியே புகார் அளித்தும் முறையான விசாரணை நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி மாணவனை போலீஸார் அடைத்து வைத்து தாக்கியதாகவும் தகவல் வெளியானது. இதனால், இந்த விவகாரத்தில் போலீஸார் உரிய விசாரணை நடத்தி மாணவிகளை ஆசைவார்த்தை கூறி அழைத்து வரச்செய்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “7 முதல் 10 வயதுடைய 3 சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக நேற்று (பிப்.1) புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நீலாங்கரை மகளிர் போலீஸார் போக்சோ மற்றும் மேலும் சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது” என்றனர்.