சென்னை: பணிப்பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள், அடுத்த மாதம் 9-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வருகிறார்.இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் 6 மாதங்களுக்கு முன் பணிப்பெண்ணாக பணியமர்த்தப்பட்டார்.
இந்த பெண்ணை மெர்லினாவும், அவரது கணவரும் தாக்கி கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் கடந்த 18-ம் தேதி வழக்குப் பதிவு செய் யப்பட்டது.
இதையடுத்து ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இது ஒருபுறம் இருக்க இருவர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாங்கள் சம்பந்தப்பட்ட இளம் பெண் மீது தாக்குதல் நடத்தவில்லை. இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே தங்களது ஜாமீன் மனுவைப் பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் ஆந்திராவுக்கு காரில் தப்பிச் செல்லும்போது வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்த போலீஸார் நேற்று அதிகாலை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ளநீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத் தினர்.
இந்த வழக்கு விவரங்களை விசாரித்த நீதிபதி, இருவரையும் வரும் பிப்.9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் புழல்சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.