மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க 6,099 காளைகளும், 1,784 மாடுபிடி வீரா்களும் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரா்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதலிடம் பெறும் வீரருக்கு காரும், இரண்டாமிடம் பெறும் வீரர் மற்றும் முதலிடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
மேலும், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசு, தொலைக்காட்சி, குளிர்சாதன பெட்டி எனப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த விழாவை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி உள்ளிட்டோரும் பார்வையிட்டு வருகின்றனர்.
தென் மண்டல காவல் துறைத் தலைவா் டி.எஸ்.நரேந்திரன் நாயா் தலைமையில், மதுரை சரக துணைத் தலைவா் ரம்யா பாரதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் டோங்ரே பிரவீண் உமேஷ், ரா.சிவபிரசாத், 50-க்கும் மேற்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் உள்பட 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.