புதுடெல்லி: ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகி திவ்யா பகுஜா (27) கடந்த வாரம் குருகிராமில் உள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் அவரது உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று எங்கேயே வீசி உள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதில், ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சியில் திவ்யா உடலை இழுத்துச் சென்று பிஎம்டபிள்யு காரில் ஏற்றியது பதிவாகி இருந்தது. இதையடுத்து, அந்த ஓட்டலின் உரிமையாளர் அபிஜித் சிங் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். திவ்யாவின் உடல் எங்கே வீசப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் அபிஜித் சிங்கின் ஆபாச வீடியோக்கள் திவ்யா வசம் இருந்ததாகவும் அதை வைத்து பணம் கேட்டு மிரட்டியதால் அபிஜித் சிங், திவ்யாவை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்தக் கொலையில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீஸார் தேடி வந்தனர். அவர்கள் இருவரும் கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதில் பால்ராஜ் கில் என்பவரிடம் நடத்திய விசாரணையின் அடிப் படையில் திவ்யாவின் உடலை பக்ரா கால்வாயில் இருந்து போலீஸார் மீட்டுள்ளனர். மேலும் இது திவ்யாவின் உடல்தான் என அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனைக்காக திவ்யாவின் உடல் மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.