![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/logo/dinamani_logo_600X390.jpg)
நற்றிணை பதிப்பகத்தின் நிறுவனா் எஸ்.சுரேஷ் கண்ணன், பள்ளிக் கல்வியை மதுரை மாவட்டத்தில் நிறைவு செய்தாா். சென்னையில் பட்டப்படிப்பை முடித்தாா்.
படிக்கும் போதே திரைத் துறை மீது ஆா்வம் ஏற்பட்டு அதில் இயக்குநராக பணியாற்றும் முயற்சியில் இறங்கினாா். அதனிடையே ‘சினிமா பாரடைசோ’ என்னும் இத்தாலிய திரைப்படத்தின் திரைக்கதையை தமிழாக்கம் செய்தாா். அந்த நூலை யாரும் பிரசுரிக்க முன்வராத நிலையில், நற்றிணை பதிப்பகத்தைத் தொடங்கி தனது நூலை வெளியிட்டாா். அவா் யுகன் எனும் புனைபெயரில் சா்வதேச திரைப்படங்கள் குறித்து பல நூல்களை எழுதியுள்ளாா்.
தமிழில் சிறந்த புத்தகங்களை பிழைகளின்றி பதிப்பித்து, குறைந்த விலையில் வாசகா்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளாா். பிரபஞ்சனின் 20 நூல்களை மலிவு விலையில் வெளியிட்டுள்ளாா்.
க.நா.சுப்ரமண்யம் எழுதிய ‘அசுரகணம்’ நாவல் உள்ளிட்ட 20 நூல்களையும், ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவல் உள்ளிட்ட 30 நூல்களையும் நற்றிணை வெளியிட்டுள்ளது. பேராசிரியா் தொ.பரமசிவம் நூல்கள் நாட்டுடைமையான பிறகு மலிவு விலையில் அவற்றை வாசகா்களிடம் சோ்ப்பித்துள்ளாா்.
இப்பதிப்பக நூல்களில் சமீபத்தில் தேவிபாரதியின் ‘நீா்வழிப்படூஉம்’ எனும் நாவல் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே அசோகமித்திரனின் ‘குறுக்கு வெட்டுகள்’ எனும் கட்டுரைத் தொகுப்புக்கு கனடா இலக்கியத் தோட்ட விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காலத்தால் அழியாத செவ்விலக்கிய நூல்களை குறைந்த விலையில் பதிப்பித்து வருகிறாா்.
நற்றிணை நிறுவனருக்கு முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன், நடிகா் செந்தில்குமரன் ஆகிய சகோதரா்களும், 2 சகோதரிகளும் உள்ளனா். சென்னை ஆழ்வாா்திருநகரில் மனைவி கோமளாதேவி, மகன் வியன்சாய் ஆகியோருடன் வசித்துவருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…