நத்தம்:- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புகையிலைபட்டியைச் சேர்ந்த இளம் பெண் ஜெயமணி 28, ஜல்லிக்கட்டு போட்டிக்காக நான்கு காளைகளை தயார் படுத்தி வருகிறார்.
பொதுவாக ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. காளைகளை அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அவர்களை புறமுதுகு காட்டி ஓட வைக்கும் காளைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் பெருமைகளைச் சொல்லும் விளையாட்டாகும்.
இதன் பார்வையாளர்களும் பெரும்பாலும் ஆண்களாகவே உள்ளனர். அதை மாற்றிக்காட்டும் விதமாக நத்தம் புகையிலைப்பட்டியை சேர்ந்த ஜெயமணி ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக 4 காளைகளைத் தயார் செய்து வருகிறார். அதில் 2 காங்கேயம் , ஒன்று தேனி மலைமாடு, மற்றொன்று புளிக்குளம் மாடு ஒவ்வொரு காளைக்கும் செல்லப் பெயர் வைத்து வளர்த்து வருகிறார். கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாயம் பார்க்கும் இவர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் மேலாளராகவும் பணிபுரிகிறார்.
ஜெயமணி கூறியதாவது:
சிறுவயதிலிருந்தே எனது வீட்டைச் சுற்றி காளைகள்தான் இருக்கும்.12 வயதிலே ஜல்லிக்கட்டு பார்க்கும் ஆர்வம் எனக்கு வந்தது. படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் காளைகளோடு தான் நான் அதிகம் விளையாடுவேன். நாங்கள் வளர்க்கும் காளைகள் அனைத்தும் நான் சொல்லும் வார்த்தைக்குக் கட்டுப்படும். அந்தளவுக்கு பழக்கப்படுத்தி வைத்திருப்பேன். அப்படியிருக்கும்போது நாமும் ஏன் ஜல்லிக்கட்டுக்கு காளையை தயார் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக முதலில் ஒரு காளையை வளர்த்து வந்தேன். இது கோவை, திருப்பூர்,திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் தங்க மோதிரம், தங்க காசு, குத்துவிளக்கு, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று கொடுதத்து. தற்போது 4 காளைகளை தயார் படுத்தி வருகிறேன். வீட்டிற்கு வந்தவுடன் நெல்லிக்காய், கடலை மிட்டாய், பருத்திக் கொட்டை உள்ளிட்ட ஊட்ட உணவுகள் வழங்குவது, குளிக்க வைப்பது எல்லாம் என்னுடைய வேலைதான்.
பங்கேற்பதே பெருமைதான்
போட்டியில் நான் வளர்த்த காளை பங்கேற்பதே பெருமைதான். ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டு என்று மட்டும் சொல்லிட முடியாது. கிராமங்களில் காளைகளைப் பராமரிப்பதே பெண்கள்தான். அந்த பெண்கள் வளர்க்கும் காளைகள்தான் ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. ஆனால் இந்த விஷயம் வெளியே தெரியாது. அந்த காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லும் ஆண்களுக்கு பெருமையெல்லாம் சென்றுவிடுகிறது. நானே ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகளே அழைத்துச் செல்கிறேன்.
– ஜெயமணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
![Dinamalar iPaper Combo](https://stat.dinamalar.com/new/2022/images/ipaper/newspaper-ipaper-combo-detailf.jpg)