நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகன் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில், த்ரிஷாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வந்த நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு அதற்காகப் பயன்படுத்திய ’சேரி மொழி” என்ற வார்த்தையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானர்.
![த்ரிஷா - மன்சூர் அலிகான்](https://gumlet.vikatan.com/vikatan%2F2023-11%2F3f82fecc-2671-434a-b2c1-e4baf650cde3%2FTrishaKrishnan1700325095145.jpg?auto=format%2Ccompress)
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில், அதற்கு விளக்கமளித்துப் பேசிய குஷ்பு, “நான் பயன்படுத்திய சேரி என்ற பிரெஞ்சு மொழி வார்த்தையைக் கேலியாகத்தான் பயன்படுத்தினேன். அதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்… மேலும், அந்தப் பதிவில் தி.மு.க-வைத்தானே விமர்சித்தேன்… அதற்கு எதற்கு காங்கிரஸ் எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது… தி.மு.க-வுக்காக காங்கிரஸ் வேலை செய்கிறதா… நான் சேரி என்று நீங்கள் குறிப்பிடும் அர்த்தத்தில் பேசாதபோது, ஏன் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்?