சென்னை: சஹாரா இந்தியா பரிவார் நிறுவனரான சுப்ரதா ராய் சஹாரா மறைவை அடுத்து அவருக்கு ஏராளமான கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் மனமுருக அஞ்சலி செலுத்தினர். சஹாராஸ்ரீ என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட, சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத் தலைவரும் நிர்வாக பணியாளருமான சுப்ரதா ராய் சஹாரா கடந்த 14-ம் தேதி காலமானார். லக்னோவில் 16-ம் தேதி இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
அதற்கு முன்பாக அவருக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது இரங்கல் செய்தியில், “சஹாராஸ்ரீ ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் மட்டுமல்ல, எண்ணற்ற நபர்களுக்கு உதவியும் ஆதரவும் அளித்த பெரிய மனதுடையவர் என்பதால், இது மாநிலத்துக்கும் நமது நாட்டுக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான இழப்பு” என்று கூறினார். சஹாராஸ்ரீயின் மனைவி ஸ்வப்னா ராய், மூத்த மகன் சுஷாந்தோ ராய், அவரது மனைவி ரிச்சா ராய், இளைய மகன் சீமண்டோ ராய், அவரது மனைவி சாந்திணி ராய் ஆகியோருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர்.
மும்பையில் சஹாராஸ்ரீ மறைவு செய்தியை அறிந்ததும் நடிகர் அமிதாப் பச்சன் தனது மகன் அபிஷேக் பச்சன், மகள் ஸ்பேதா பச்சன் நந்தா ஆகியோருடன் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் விளையாட்டு வீரர்கள் பி.வி.சிந்து, யுவராஜ் சிங், சாய்னா நெவால் மற்றும் ரித்திஷ் தேஷ்முக், புல்லேலா கோபிசந்த் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். 1978-ம் ஆண்டு வெறும் ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சிறிய அலுவலகத்தில் 2 உதவியாளர்களுடன் சஹாராஸ்ரீயால் தொடங்கப்பட்ட சிறுசேமிப்பு சார்ந்த நிறுவனமான சஹாரா இந்தியா பரிவார் தற்போது 12 லட்சம் பணியாளர்களுடன் மிகப்பெரிய தொழில் குழுமமாக வளர்ச்சி அடைந்துள்ளது. தொழிலதிபர் மட்டுமல்லாமல் சிறந்த தேசியவாதியுமான சஹாரா, கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த 320 வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்ததற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் பாராட்டப்பட்டவர். அன்னை தெரசாவின் அன்பைப் பெற்றவர்.