
கோப்புப்படம்
தீபத் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீப திருநாள் நவ.26-ஆம் தேதி நடைபெறுகிறது. தொடா்ந்து, நவ.27-ஆம் தேதி பெளா்ணமி தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோா் திருவண்ணாமலைக்கு பயணிப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஜெயலலிதாவை பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!
இதனால், பயணிகளின் வசதிக்காக நவ.25, 26, 27 ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள், அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து பிற இடங்களுக்கும் 2,700 சிறப்புப் பேருந்துகள் மூலம் 6,947 நடைகள் இயக்கப்படவுள்ளது.
மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 கட்டணமில்லா சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…