மதுரை: ப்ரணவ் ஜீவல்லரி மோசடி வழக்கில் சமரசத் தீர்வு மையத்தில் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, திருச்சி மாவட்டங்களில் நடைபெற்ற ப்ரணவ் ஜூவல்லரி நகை சேமிப்புத் திட்ட மோசடி குறித்து பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப்ரணவ் ஜூவல்லரி உரிமையாளர்களான சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவரது மனைவி கார்த்திகா மதன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், கரோனா நெருக்கடியால் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சுமூகமான முறையில் தீர்வு காணத் தயாராக உள்ளோம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சமரசத் தீர்வு மையத்தில் பேசி முடிவெடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.