சென்னை: “செய்யாறு அருகே விளைநிலங்கள் கையப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்க பணிகளுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. செய்யாறு நகரில் ஏற்கெனவே சிப்காட் தொழிற்பூங்காவின் இரண்டு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் தமிழக அரசு தொடங்கியுள்ளது.