சென்னை: ஆவடியில் விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையை அடுத்த ஆவடி தொகுதியில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மத்திய அரசின் தளவாட தொழிற்சாலைகள், மத்திய ரிசர்வ் காவல் படை, விமானப் படை மற்றம் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோனோர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இவை தவிர, ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், தற்போது ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.