Tamilnadu
oi-Velmurugan P
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த மகன்கள் தன்னுடைய அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதை இன்றைய காலக்கட்டத்திலும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கப்படும் இந்த விஷயம், இங்கு மட்டும் விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த மகன்கள், தன் அம்மாவிற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இளம் வயது
கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகன்கள் பாஸ்கர் மற்றும் அவரது தம்பி விவேக் இருவரும் தங்களது தந்தையை இளம் வயதிலேயே இழந்தார்கள். 2009ஆம் ஆண்டில் அவர்களது தந்தை உயிரிழக்கும்போது பாஸ்கர், வேலூரில் பொறியியல் துறையில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாராம். விவேக் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாராம்.

பிள்ளைகள்
இந்நிலையில் அப்போதெல்லாம் மறுமணம் குறித்து அவர்களுக்கு சிந்தனையே இல்லையாம். அவர்கள் ஊரில், சொந்த பந்தங்களில் கணவரை இழந்து, தனியாகக் குழந்தைகளை வளர்ப்பார்கள். எல்லாரும் அவர்கள் அப்படி தனியாக இருப்பதைப் பெருமையாகப் பேசியிருக்கிறார்கள். அதனால் அவரது செல்வியின் பிள்ளைகளும் அப்படித்தான் நினைத்திருக்கிறார்கள்.

யோசிக்கவில்லை
இந்நிலையில் பாஸ்கர், தனது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நான் படித்த பள்ளியில் பணியாற்றிய ஓர் ஆசிரியரை வழக்கம்போல் ஊருக்குப் போனபோது சந்தித்துள்ளார். அப்போது அவர்தான் அம்மாவின் மறுமணம் குறித்துப் பேச்சு எடுத்திருக்கிறார். ‘உங்க அம்மா இத்தனை நாளா தனியா கஷ்டப்படுறாங்களே, அவங்களுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வெக்கலாமில்ல’ என்று அவர் கேட்டிருக்கிறார். ஆனால் அதை பாஸ்கர் பெரிதாக யோசிக்கவில்லை. அவருடன் பேசுவதையே தவிர்த்துவிட்டார்.

மறுமணம்
இதனிடையே நீண்ட காலத்திற்கு பிறகு பெரியாரின் மறுமணம் குறித்த எழுத்துகள், கலைஞருடைய எழுத்துகளை வாசிப்பது, அதுகுறித்து விவாதிப்பது என பாஸ்கர் தொடர்ந்துள்ளார். அப்போது தான் “நம் வீட்டிலும் அம்மா கணவரை இழந்து தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக்கூடாது?” எனச் சிந்தித்தாராம். அதற்கு அவரது தம்பி விவேக் கூறினார். இருவரும் அவர்களது அம்மாவிடம் இதுபற்றிப் பேசியுள்ளார்கள். முதலில் அவர் சம்மதிக்கவில்லை. ஆனால் அவரை பேசிபேசி ஒருகட்டத்தில் சம்மதிக்கவும் வைத்துள்ளார்கள். அம்மாவின் சம்மதம் கிடைத்த பின்னர் கடைசியில் மாப்பிள்ளை தேடி அம்மாவுக்கு வெற்றிகரமாக மறுமணமும் செய்து வைத்திருக்கிறார்கள்.

திருமண உறவு
இந்த திருமணம் குறித்து பிபிசிக்கு பேட்டி அளித்த செல்வி, “உன் பிள்ளைகளே கூறினாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு வாழ்க்கைக்கு நீ எப்படி சம்மதிக்கலாம் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். கணவரை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்ள சட்டமே இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்? பிள்ளைகளுக்குச் சுமையாக இருக்காமல், இறுதிக்காலத்தில் எனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே! திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை. நட்புறவோடு உறுதுணையாக ஒருவர் உங்களுக்கென இருக்கிறார் என்பதே தனி தைரியத்தை வழங்கும்” என்றார் செல்வி
English summary
Kallakurichi: sons who were of marriageable age had search of bridegroom for their mothers. Mother’s marriage also went smoothly. This marriage is a hot topic on social media.
Story first published: Sunday, March 19, 2023, 17:55 [IST]