சென்னை:
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பியை இப்போது போலீசார் வேறு ஒரு புகாரில் கைது செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் மோசடி செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் கடந்த ஜன. 5ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் வேறு ஒரு புகாரில் விஜய நல்லதம்பியை இப்போது போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு மாத காலமாகத் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி அருகே வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
உறவினருக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக தன்னிடம் 30 லட்ச ரூபாய் பணமோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் விஜய நல்லதம்பியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரை விருதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.