சென்னை;

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது?

 

* இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது,

* வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது.

* கடைகள் இயங்கும் நேரத்தை குறைப்பது.

* பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பை ரத்து செய்து ஆன்லைன் வகுப்பு முறையை நடைமுறைப்படுத்துவது

* பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விதம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அரசின் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ‘இந்தியாவில் கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டது; ஆனால்..’ – கொரோனா நிபுணர் குழு தலைவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *