நடிகரும், இயக்குநரும் ஆன முகேஷ் சாப்ரா, சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான ‘தில் பெச்சாரா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசியிருக்கிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் சர்ச்சையாகவே இருக்கிறது. சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘தில் பெச்சாரா’. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இப்படத்தை முகேஷ் சாப்ரா இயக்கி இருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/8dbc9232-4b96-413c-a569-ffc28e0292af/MV5BNmI0MTliMTAtMmJhNC00NTJmLTllMzQtMDI3NzA1ODMyZWI1XkEyXkFqcGdeQXVyODE5NzE3OTE___V1_.jpg)
சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி, சைஃப் அலி கான் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்திற்கு, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து பலரும் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் இயக்குநர் முகேஷ் சாப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார். “ தில் பெச்சாரா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உண்மையிலேயே நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் சுஷாந்தின் மறைவிற்கு பிறகு எனக்கு அதை எடுக்க மனமில்லை.
இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆன திரைப்படம். அதில் பல உணர்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. ‘தில் பெச்சாரா’ என்பது சுஷாந்திற்கான படம். அந்த படத்தின் அழகை நான் மாற்ற விரும்பவில்லை. ‘தில் பெச்சாரா’ படத்தை எடுக்கும்போது சுஷாந்த்தும், நானும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் என்று பேசிக்கொண்டோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-05/29d0dd70-00e8-4e33-8500-62f3eeaa7d0f/ssr_chhabra_640.jpg)
அதையும் தாண்டி சுஷாந்த்துடன் மூன்று நான்கு படங்களில் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். அது என்னுடைய கனவாக இருந்தது. ஆனால் அவை நிறைவேறாமல் போய்விட்டது” என்று கூறியிருக்கிறார்.