இந்திய திரையிசையின் தவிர்க்க முடியாத பெயர் இளையராஜா. தன் திறமையால் லட்சக்கணக்கான மக்களை தன் ரசிகர்களாகக் கொண்டிருந்தாலும், தன்னைப் பற்றி விமர்சனங்கள் வந்தபோதிலும் ‘மற்றவர்களை கவனிப்பது தன் வேலை இல்லை, தன்னுடைய வேலையை கவனிப்பது மட்டுமே தன் வேலை’ என்று கூறியவர், “நீங்கள் என்னை வாழ்த்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த ஒரு மாத காலத்தில் சிம்பொனியே எழுதி முடித்துவிட்டேன்” என சமீபத்தில் ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்து வாயடைக்கவைத்தார்.
அதிலிருந்து, மீள்வதற்குள் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ துவங்கப்பட்டிருப்பது, ‘என்னுடைய வேலையை கவனிப்பது மட்டுமே என் வேலை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமா போயிட்டு இருக்கேன்’ என்று அவர் சொன்னதை நினைவூட்டி பிரமித்துவைத்துள்ளார். இளையராஜாவுடன் இணைந்திருப்பது குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடியிடம் பேசினேன்…
![இளையராஜா ஆராய்ச்சி மையம்](https://gumlet.vikatan.com/vikatan%2F2024-05%2F47560098-2797-4bb6-a96b-d49acb45d2e4%2FGOCZYjtXIAA9LuK__1_.jpg?auto=format%2Ccompress)
“ஐ.ஐ.டியில் இசை தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்துக்கிட்டிருக்கோம். புதிய இசைக் கருவிகளை கண்டுபிடிப்பது, இசையால் ஒருவருக்கு ஏற்படும் நன்மைகள், AI மூலம் இசையை உருவாக்குவது என இசைத் துறையில் நிறைய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இதையெல்லாம் அடிப்படையா வெச்சுக்கிட்டு, ஐ.ஐ.டியில் இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கணும்னு முடிவு பண்ணினோம். அனைவருக்கும் ஐ.ஐ.டி போல அனைவருக்கும் இசையை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்களோட நோக்கம். அப்படி யோசிச்சதுமே மனசுல உடனே தோன்றியவர் ‘இசைஞானி’ இளையராஜா சார்தான். இசையில இருக்கிற கடினமான ராகங்களைக்கூட சாதாரண மக்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தவர் அவர்தான்.