சென்னை: சொத்து தொடர்பான முன் விரோதத்தில் தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாவூர், எர்ணீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது மொய்தீன்(42). பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஓட்டலில் சர்வராக வேலை செய்து வந்தார். அதே ஓட்டலில் அவரது அண்ணன் ராஜா முகமது(48), காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
மதுரையில் உள்ள சொத்து பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு முகமது மொய்தீன், ஓட்டலில் உள்ள ஓய்வு அறையில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அவரது அண்ணனுக்கும், அவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கீழே தள்ளப்பட்டதில் முகமது மொய்தீனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த விவகாரம் குறித்து கொருக்குப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து, ராஜா முகமதுவைக் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது மொய்தீன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.