திருவள்ளூர்: பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் தேநீர் கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநிலத் தலைவர் ராஜாஜி, மர்ம நபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி (45). இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் மாநில தலைவராக உள்ள இவர், இன்று மாலை பூந்தமல்லி அருகே உள்ள குமணன்சாவடி, மாங்காடு சாலையில் உள்ள தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், தேநீர் கடைக்குள் நுழைந்து, அரிவாளால் ராஜாஜியை வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில், படுகாயமடைந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடம் விரைந்து, ராஜாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராஜாஜியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.