புனே: கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புனேவில் சொகுசு காரை சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் மதுபோதையில் இயக்கி, இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் ஜாமீன் பெற்றது சர்ச்சையான சூழலில் அந்தச் சிறுவனின் தந்தையை போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த சிறுவனின் தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அவரை போலீஸார் கைது செய்ததாக புனே காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, புனேவின் கல்யாணி நகர் பகுதியில் குறுகிய சாலையில் மதுபோதையில் சொகுசு காரை வேகமாக இயக்கிய ஓட்டுநர் மீது பிணையில் வெளிவர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் அவர் சிறுவன் என்பதால் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த சூழலில்தான் விபத்தை ஏற்படுத்திய அந்த சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக் கூடத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன. அந்த வகையில் சிறுவனின் தந்தை மற்றும் மதுபானக் கூடத்தின் மீது சிறார் நீதிச் சட்டப்பிரிவு 75 மற்றும் 77-ன் கீழ் போலீஸார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் ஆவார். அவர் கைது செய்யப்பட்ட 15 மணி நேரத்தில் ஜாமீனில் வெளிவந்தார். அது சர்ச்சையானது. அந்தச் சிறுவனுக்கு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற நிபந்தனைகளை நீதிமன்றம் வழங்கியது விமர்சிக்கப்பட்டது.