கோவை: சென்னையில் மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் ரம்யா (33), காரமடையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் கடந்த மாதம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பால்கனி கூரையில் வெங்கடேஷ்-ரம்யா தம்பதியின் 7 மாத குழந்தை தவறி விழுந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவை காரமடைபெள்ளாதி பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் ரம்யா வந்திருந்தார். அவரது பெற்றோர் நேற்றுமுன்தினம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரம்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக காரமடை போலீஸார் வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் கூறும்போது, “குழந்தை தவறிவிழுந்த சம்பவத்தில், தாயான ரம்யாவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அக்கம்பக்கத்தில் வசிப்போரும் கண்டித்துள்ளனர். இதனால் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான ரம்யா, பெற்றோர் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர்.