லண்டன்: லண்டன் பேருந்து நிறுத்தம் ஒன்றில் 66 வயதான இந்திய வம்சாவளி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் 22 வயதான நபர் ஒருவர். இந்த சம்பவம் வடமேற்கு லண்டனில் நடைபெற்றுள்ளது.
இதில் கொல்லப்பட்டவர் அனிதா முகே என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவர் அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவையில் பகுதி நேரமாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த வாரம் அங்குள்ள எட்ஜ்வேர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அவர் காத்திருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர்.
அவரது மார்பு மற்றும் கழுத்து பகுதியில் கொலையாளி ஜலால் டெபெல்லா கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் உடனடியாக அங்கு வந்தனர். மருத்துவக் குழுவினரும் விரைந்தனர். அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளித்த நிலையிலும் கூட சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் ஜலால் டெபெல்லாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் கத்தியும் இருந்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.