கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மாங்கூழ் தொழிற்சாலையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் மூலம் கென்யாவில் உள்ள ஒரு தனியார் நிறுவத்தின் பெயரில் போலி ஆர்டர் செய்யப்பட்டு, ரூ.73 லட்சம் மதிப்பிலான 120.4 டன் மாங்கூழ் ஏற்றுமதி ஆனது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பர்த்தி அடுத்த கருத்தமாரம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (59). இவர் ‘நியூஜென் அக்ரோ புராசசர்ஸ் பி.லிமிடட்’ என்கிற மாங்கூழ் தொழிற்சாலையில் நிர்வாக இயக்குநராக உள்ளார். இவரின் அலுவலக மின்னஞ்சலுக்கு கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி, கென்யா நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன பெயரில் மெயில் ஒன்று வந்தது.
அதில், தாங்கள் கென்யா நாட்டின் சிஸ்கோ கார்ப்பரேஷன் கம்பெனியிலிருந்து தொடர்பு கொள்கிறோம். எங்களுக்கு, 87,290 டாலர் மதிப்பிலான 120.4 டன் (1 லட்சத்து 20 ஆயிரத்து 400 கிலோ) மாங்கூழ் தேவைப்படுகிறது. இதனை உடனடியாக அனுப்பினால், உங்களுக்கான தொகை அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாங்கூழ் இந்திய மதிப்பு ரூ.73 லட்சம் ஆகும்.
கப்பல் மூலம் மொம்பாசா துறைமுகம்: இதனை நம்பிய ரமேஷ்குமார், இசிஜிஎஸ் எனப்படும் சந்தைப்படுத்துதல், விற்பனைக்கான அனுமதி பெற்று, கென்யாவில் உள்ள சிஸ்கோ கார்ப்பரேஷன் கம்பெனிக்கு, அவர்கள் கேட்ட மாங்கூழை அனுப்ப முடிவு செய்தார். இதையடுத்து கடந்த 2023 ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, எண்ணூர் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம், கென்யாவின் மொம்பாசா துறைமுகத்துக்கு மாங்கூழை அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்த தகவலும் கென்யாவில் உள்ள அந்த நிறுவனத்திற்கு தெரிவித்தபோது, அதன் நிர்வாகிகள், நாங்கள் மாங்கூழ் எதுவும் ஆர்டர் செய்யவில்லை எனக் கூறி வாங்க மறுத்துள்ளனர். மேலும் ரமேஷ்குமாருக்கு போலியான நபர்கள், கென்யா நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, மெயில் அனுப்பியதும், பேசியதும் தெரிந்தது.
மாங்கூழை மீட்க… – மாங்கூழ் கென்யா துறைமுறைகத்திற்கு சென்ற நிலையில் இதனை வாங்கவும் யாரும் முன் வரவில்லை. போலியான நபர்கள் பேசி, தன் கம்பெனியில் இருந்து, ரூ.73 லட்சம் மாங்கூழை ஏமாற்றி வாங்க முயன்றதை அறிந்த ரமேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைமில் அளித்த புகாரில், கென்யா மொம்பாசா துறைமுகத்தில் உள்ள மாங்கூழை மீட்டு தருமாறும், மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.